பொதுவாக ஆணுக்கு 25 வயதுக்குள்ளும், பெண்ணுக்கு 21 வயதுக்குள்ளும் திருமணம் நடைபெறுவது நல்லது. ஆனால், எல்லோருக்கும் அப்படி நடந்துவிடுவதில்லை. பொருளாதாரச் சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். அதேநேரம், வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தாலும் சிலருக்கு உரிய வயதில் திருமணம் நடைபெறுவதில்லை. ஜோதிட ரீதியாகப் பார்த்தால், இந்த நிலைக்கு களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்கள் காரணமாக இருக்கலாம். இத்தகைய தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் பரிகாரங்கள் குறித்து 'ஆஸ்ட்ரோ' கிருஷ்ணனிடம் கேட்டோம்.
''கல்யாணம் ஆகி ஒரு பெண் வீட்டுக்கு வந்தாலோ, அல்லது நம் வீட்டிலேயே ஒரு பெண் கல்யாணத்துக்கு தயாராக இருந்தாலோ அந்த பெண்ணின் ஜாதகத்தில் 'மாங்கல்ய தோஷம்' இருக்கிறதா என்று முதலில் பார்க்கவேண்டும். சுமங்கலியாக இறந்த பெண்ணுக்கு வருடாவருடம் 'சுமங்கலி பூஜை' செய்யாமல் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும். (நம் பித்ருக்களுக்கு திதி கொடுக்காமல் இருந்தால், எப்படி 'பித்ரு தோஷம்' ஏற்படுமோ அப்படி)
கல்யாணம் ஆகாமல் இருந்தாலோ, திருமணம் ஆகி ஒரு பெண் புகுந்த வீட்டுக்குச் சென்றாலோ கணவனுக்கு அல்லது மாமனார், மாமியாருக்கு மாங்கல்யதோஷத்தின் மூலமாக அசெளகரியங்கள் ஏற்படலாம்.
மாங்கல்ய தோஷத்துக்கு உரிய பரிகாரம் என்ன?
* வீட்டில் சுக்லபக்ஷ வெள்ளிக்கிழமையிலோ, அஷ்டமி, நவமி இல்லாத ஒரு சுத்தமான சுப நாளிலோ சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.
* வீட்டில் ஒரு வெள்ளிக்கிழமை, 'மஹாலக்ஷ்மி பூஜை' செய்து சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துணி, முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம் ஆகியவற்றை தானம் செய்து அறுசுவை உணவு படைத்து அவர்களை நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றால் இந்த தோஷம் நீங்கும்
* 'மிருத்யுஞ்சய ஹோமமும் ஜபமும்' வீட்டில் செய்தால் இந்த தோஷத்துக்கு சிறந்த பரிகாரமாக விளங்கி விசேஷ பலன்களைத் தரும்.
களத்திர தோஷமும் அதற்கு உரிய பரிகாரங்களும்.
மாங்கல்ய தோஷம் போலவே, களத்திர தோஷமும் திருமணத்தின் போது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். களத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? என்பதைப் பார்ப்போம்.
* லக்னம், சந்திரன், சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1, 2, 4, 7 , 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அல்லது சேர்ந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.
* 4 - ம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், 2, 7 - ம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6, 8, 12 -ம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும்.
* சுக்கிரனுடன் சூரியன், சனி அல்லது ராகு, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7 -ம் இடம் பாவ கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், மிகவும் பாதகமான களத்திர தோஷம் ஆகும்.
இந்த தோஷம் 10-ல் 6 ஜாதகங்களில் இருக்கும். கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்து தங்களது மணவாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொள்ளலாம்.
பரிகாரங்கள் :
முதலில் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முறைப்படி வழிபாடு செய்து, வீட்டில் சுமங்கலி பூஜை செய்யவேண்டும். பின்னர் திருமணஞ்சேரி, திருவிடந்தை ஆகிய கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
* ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு பங்குனி மாதம் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமாங்கல்யமும், மஞ்சள் பட்டு பாவாடையும் சாத்தி ஒரு மஞ்சள் சரடும் பாதத்தில் வைத்து வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்கவேண்டும். இதைத் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமை 'மஹாலக்ஷமி ஸ்தோத்ரம்' சொல்லி வந்தால், இந்த தோஷம் நீங்கி சீக்கிரம் திருமணம் நடைபெறும்.
ஆண்களின் ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம்:
ஆண்களின் ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம் என்பது மேலே சொன்ன தோஷங்களோடு சூரியன், சுக்கிரன் இருவரும் 5, 7, 9 - ம் வீட்டில் இருந்தாலும், சூரியன், ராகு அல்லது கேது சேர்ந்து 7 -ம் வீட்டில் இருந்தாலும் 2 - ம் வீடு பாதகப்பட்டாலும் ஏற்படும்.
பரிகாரங்கள்:
சூரியனால் தோஷம் ஏற்பட்டால், உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோயிலுக்குச் செப்புப் பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சுக்கிரனால் ஏறபட்டால், ஸ்ரீரங்கம் காவிரியில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு சொம்பு பாலை விட்டு, குளித்துவிட்டு, தாயாருக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.
களத்திர தோஷங்களுக்கு, நவகிரக ஹோமங்கள் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் வரும் பெளர்ணமிகளில் சத்யநாராயண பூஜை செய்வதும் நல்ல பலனை அளிக்கும்" எனக் கூறினார்.
0 Comments